This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday 31 October 2018

19. வடநாடு செல்லும் வணிகர்

எதிர்பாராத முத்தம்

- பாரதிதாசன் கவிதை


பளிச்சென்று நிலா எரிக்கும் 

இரவினில் பயணம் போகும் 

ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே 

ஒருநெஞ்சம் மகர வீதி 

கிளிச்சந்த மொழியாள் மீது 

கிடந்தது. வணிக ரோடு 

வௌிச்சென்ற அன்னோன் தேகம்

வெறுந்தேகம் ஆன தன்றோ! 


வட்டநன் மதியி லெல்லாம் 

அவள்முக வடிவங் காண்பான்! 

கொட்டிடும் குளிரில் அப்பூங் 

கோதைமெய் இன்பங் காண்பான்! 

எட்டுமோர் வானம் பாடி 

இன்னிசை தன்னி லெல்லாம் 

கட்டிக்க ரும்பின் வாய்ச்சொற் 

கவிதையே கண்டு செல்வான். 


அணிமுத்து மணிசு மக்கும் 

மாடுகள் அலுத்துப் போகும். 

வணிகர்கள் அதிக தூர 

வாய்ப்பினால் களைப்பார். நெஞ்சில் 

தணியாத அவள் நினைவே 

பொன்முடி தனக்கு நீங்காப் 

பிணியாயிற் றேனும் அந்தப் 

பெருவழிக் கதுதான் வண்டி! 


இப்படி வடநாட் டின்கண் 

டில்லியின் இப்பு றத்தில் 

முப்பது காத முள்ள 

மகோதய முனிவ னத்தில் 

அப்பெரு வணிகர் யாரும் 

மாடுகள் அவிழ்த்து விட்டுச் 

சிப்பங்கள் இறக்கிச் சோறு 

சமைத்திடச் சித்த மானார். 


அடுப்புக்கும் விறகினுக்கும் 

இலைக்கலம் அமைப்ப தற்கும், 

துடுப்புக்கும் அவர வர்கள் 

துரிதப்பட் டிருந்தார். மாவின் 

வடுப்போன்ற விழிப்பூங் கோதை 

வடிவினை மனத்தில் தூக்கி 

நடப்போன் பொன்முடிதான் அங்கோர் 

நற்குளக் கரைக்குச் சென்றான். 


ஆரியப் பெரியோர், தாடி 

அழகுசெய் முகத்தோர், யாக 

காரியம் தொடங்கும் நல்ல 

கருத்தினர் ஐவர் வந்து 

"சீரிய தமிழரே, ஓ! 

செந்தமிழ் நாட்டா ரேஎம் 

கோரிக்கை ஒன்று கேட்பீர்" 

என்றங்கே கூவி னார்கள். 


தென்னாட்டு வணிக ரான 

செல்வர்கள் அதனைக் கேட்டே 

என்னஎன் றுசாவ அங்கே 

ஒருங்கேவந் தீண்டி னார்கள். 

"அன்புள்ள தென்னாட் டாரே, 

யாகத்துக் காகக் கொஞ்சம் 

பொன்தரக் கோரு கின்றோம், 

புரிகஇத் தருமம்" என்றே. 


வந்தவர் கூறக் கேட்டே 

மாத்தமிழ் வணிக ரெல்லாம் 

சிந்தித்தார் பொன்மு டிக்குச் 

சேதியைத் தெரிவித் தார்கள். 

வந்தனன் அன்னோன் என்ன 

வழக்கென்று கேட்டு நின்றான். 

பந்தியாய் ஆரி யர்கள் 

பரிவுடன் உரைக்க லானார். 


"மன்னவன் செங்கோல் வாழும், 

மனுமுறை வாழும்; யாண்டும் 

மன்னிய தருமம் நான்கு 

மறைப்பாதத் தால் நடக்கும்; 

இன்னல்கள் தீரும்; வானம் 

மழைபொழிந் திருக்கும்; எல்லா 

நன்மையும் பெருகும்; நாங்கள் 

நடத்திடும் யாகத் தாலே. 


ஆதலின் உமைக்கேட் கின்றோம் 

அணிமுத்து வணிகர் நீவீர் 

ஈதலிற் சிறந்தீர் அன்றோ 

இல்லையென் றுரைக்க மாட்டீர்! 

போதமார் முனிவ ரேனும் 

பொன்னின்றி இந்நி லத்தில் 

யாதொன்றும் முடிவ தில்லை" 

என்றனர். இதனைக் கேட்டே 


பொன்முடி உரைக்க லுற்றான்: 

"புலமையில் மிக்கீர்! நாங்கள் 

தென்னாட்டார்; தமிழர்,சைவர் 

சீவனை வதைப்ப தான 

இன்னல்சேர் யாகந் தன்னை 

யாம்ஒப்ப மாட்டோம் என்றால் 

பொன்கொடுப் பதுவும் உண்டோ 

போவீர்கள்" என்று சொன்னான். 


காளைஇவ் வாறு கூறக் 

கனமுறு தமிழர் எல்லாம் 

ஆளன்பொன் முடியின் பேச்சை 

ஆதரித் தார்கள்; தங்கள் 

தோளினைத் தூக்கி அங்கை 

ஒருதனி விரலால் சுட்டிக் 

"கூளங்காள்! ஒருபொன் கூடக் 

கொடுத்திடோம் வேள்விக்" கென்றார். 


கையெலாம் துடிக்க அன்னார் 

கண்சிவந் திடக்கோ பத்தீ 

மெய்யெலாம் பரவ நெஞ்சு 

வெந்திடத் "தென்னாட் டார்கள் 

ஐயையோ அநேக ருள்ளார் 

அங்கத்தால் சிங்கம் போன்றார் 

ஐவர்நாம்" எனநி னைத்தே 

அடக்கினார் எழுந்த கோபம். 


வஞ்சத்தை எதிர்கா லத்துச் 

சூழ்ச்சியை வௌிக்காட் டாமல் 

நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு 

வாயினால் நேயங் காட்டிக் 

"கொஞ்சமும் வருத்த மில்லை 

கொடாததால்" என்ப தான 

அஞ்சொற்கள் பேசி நல்ல 

ஆசியும் கூறிப் போனார். 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.