This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday 31 October 2018

21. ஜீவமுத்தம்

எதிர்பாராத முத்தம்

- பாரதிதாசன் கவிதை


வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்; 

வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று 

வடதிசைநோக் கிச்சென்றாள். நெருங்க லானார்! 

வளர்புதர்கள் உயர்மரங்கள் நிறைந்த பூமி! 

நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே 

நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும் 

வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்! 

வணிகர்களும் கண்டார்கள் வெகுதூ ரத்தில்! 


பொன்முடியும் எதிர்கண்டான் ஒருகூட் டத்தைப் 

புலைத்தொழிலும் கொலைத்தொழிலும் புரிவோ ரான 

வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்; 

வாய்மையுறு தமிழரெனத் தெரிந்து கொண்டான். 

தன்நடையை முடுக்கினான். எதிரில் மங்கை 

தளர்நடையும் உயிர்பெற்றுத் தாவிற் றங்கே! 

என்னஇது! என்னஇது! என்றே அன்னோன் 

இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான். 


"நிச்சயமாய் அவர்தாம்"என் றுரைத்தாள் மங்கை 

"நிசம்"என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல் 

கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்; கைகள் 

கொட்டினாள்! ஆடினாள்! ஓட லானாள். 

"பச்சைமயில்; இங்கெங்கே அடடா என்னே! 

பறந்துவந்து விட்டாளே! அவள்தான்" என்று 

கச்சைதனை இறுக்கிஎதிர் ஓடி வந்தான். 

கடிதோடி னாள்அத்தான் என்ற ழைத்தே! 


நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது 

நெடுமரத்தின் மறைவினின்று நீள்வாள் ஒன்று 

பாய்ந்ததுமேல்! அவன்முகத்தை அணைத்தாள் தாவிப் 

பளீரென்று முத்தமொன்று பெற்றாள்! சேயின் 

சாந்தமுகந் தனைக்கண்டாள்; உடலைக் காணாள்! 

தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்! 

தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன் 

செத்ததற்குச் செத்தாள்அத் தென்னாட் டன்னம்! 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.