This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 25 October 2018

14. எதிர்பாராப் பிரிவு

எதிர்பாராத முத்தம்


- பாரதிதாசன் கவிதை


பொதிசுமந்து மாடுகளும் முன்னே போகப் 

போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர். 

அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால் 

ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்க ளோடு 

குதிகாலைத் தூக்கிவைக்கத் துடித்துக் காதல் 

கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல லுற்றான். 

மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி 

வந்துநுழைந் ததுமுத்து வணிகர் கூட்டம். 


வடநாடு செல்கின்ற வணிகர்க் கெல்லாம் 

மங்கையரும் ஆடவரும் வீதி தோறும் 

"இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்" 

என்றுரைத்து வாழ்த்த லுற்றார்! மாடிமீது 

சுடரொன்று தோன்றிற்று. பொன்மு டிக்கோ 

துயர்ஒன்று தோன்றிற்று. கண்ணீர் சிந்த 

அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால் 

"அன்பேநீ விடைகொடுப்பாய்" என்று கேட்டான். 


எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும் 

எமலோகத் துக்கன்பன் செல்வா னென்றே! 

அதிர்ந்ததவள் உள்ளந்தான் பயணஞ் செல்லும் 

அணிமுத்து வணிகரொடு கண்ட போது 

விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக 

வெம்பினாள்; வெடித்துவிடும் இதயந் தன்னைப் 

புதுமலர்க்கை யால்அழுத்தித் தலையில் மோதிப் 

புண்ணுளத்தின் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள். 


விடைகேட்கும் பொன்முடிக்குத் திடுக்கிட் டஞ்சும் 

விழிதானா? விழியொழுகும் நீர்தா னா?பின் 

இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெ ருப்பா? 

எதுவிடை?பொன் முடிமீண்டும் மீண்டும் மீண்டும் 

கடைவிழியால் மாடியிலே கனிந் திருக்கும் 

கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை 

உடைந்துவிழு வாள்அழுவாள், அழுவாள் கூவி! 

"உயிரேநீர் பிரிந்தீரா" என்று சோர்வாள்! 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.