This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday 25 October 2018

15. அழுதிடுவாள் முழுமதியாள்

எதிர்பாராத முத்தம்

- பாரதிதாசன் கவிதை


"இங்கேதான் இருக்கின்றார் ஆத லாலே 

இப்பூதே வந்திடுவார் என்று கூறி 

வெங்காதல் பட்டழியும் என்உ யிர்க்கு 

விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன். 

இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை; 

இருமூன்று மாதவழித் தூர முள்ள 

செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி 

சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்ப துண்டோ? 


செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் 

சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி 

எழுந்தோடும் கிள்ளைபோல் எனது டம்பில் 

இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை! 

வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப 

வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக் 

கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க 

கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள். 


தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று 

தள்ளாடும்; விழும்எழும்பின் னிற்கும்; சாயும். 

தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள். 

தோளசந்து தாளசந்து மாடி விட்டுப் 

பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து 

படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந் தன்னில் 

நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம் 

நாவறளக் கத்துதல்போல் பேச லுற்றார். 


வடநாடு செல்கின்றான் அந்தப் பையன் 

உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்! 

நடப்பானா? தூரத்தைச் சமாளிப் பானா? 

நான்நினைக்க வில்லைஎன்று மகிழ்ச்சி கொண்டு 

திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள். 

சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய் 

வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்! 

மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய் கன்தான். 


வெள்ளீயம் காய்ச்சிப்பூங் கோதை காதில் 

வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை 

கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் 

கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் 

துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார் 

துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா? 

தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் 

தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே. 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.