This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday 29 October 2018

17. ஆசைக்கொரு பெண்

எதிர்பாராத முத்தம்

- பாரதிதாசன் கவிதை


புன்னையில் அவளு டம்பு 
புதைந்தது! நினைவு சென்று 
கன்னலின் சாறு போலக் 
கலந்தது செம்ம லோடு! 
சின்னதோர் திருட்டு மாடு 
சென்றதால் அதைப் பிடித்துப் 
பொன்னன்தான் ஓட்டி வந்தான் 
புன்னையில் கட்டப் போனான். 

கயிற்றொடு மரத்தைத் தாவும் 
பொன்னனின் கையில் தொட்டுப் 
பயிலாத புதிய மேனி 
பட்டது. சட்டென் றங்கே 
அயர்கின்ற நாய்கனைப் போய் 
அழைத்தனன்; நாய்கன் வந்தான் 
மயில்போன்ற மகளைப் புன்னை 
மரத்தோடு மரமாய்க் கண்டான். 

"குழந்தாய்"என் றழைத்தான். வஞ்சி 
வடிவினைக் கூவி "அந்தோ 
இழந்தாய்நீ உனது பெண்ணை!" 
என்றனன். வஞ்சி தானும் 
முழந்தாளிட் டழுது பெண்ணின் 
முடிமுதல் அடி வரைக்கும் 
பழஞ்சீவன் உண்டா என்று 
பதைப்புடன் தடவிப் பார்த்தாள். 

"அருமையாய்ப் பெற்றெ டுத்த 
ஆசைக்கோர் பெண்ணே!" என்றும் 
அருவிநீர் கண்ணீ ராக 
அன்னையும் தந்தை யும்"பொற் 
றிருவிளக் கனையாய்!" என்றும் 
செப்பியே அந்தப் புன்னைப் 
பெருமரப் பட்டை போலப் 
பெண்ணினைப் பெயர்த் தெடுத்தார். 

கூடத்தில் கிடத்தி னார்கள் 
கோதையை! அவள் முகத்தில் 
மூடிய விழியை நோக்கி 
மொய்த்திருந் தார்கள். அன்னாள் 
வாடிய முகத்தில் கொஞ்சம் 
வடிவேறி வருதல் கண்டார்; 
ஆடிற்று வாயிதழ் தான்! 
அசைந்தன கண்ணி மைகள். 

எழில்விழி திறந்தாள். "அத்தான்" 
என்றுமூச் செறிந்தாள். கண்ணீர் 
ஒழுகிடப் பெற்றோர் தம்மை 
உற்றுப் பார்த்தாள்; கவிழ்ந்தாள். 
தழுவிய கைகள் நீக்கிப் 
பெற்றவர் தனியே சென்றார். 
பழமைபோல் முணு முணுத்தார்; 
படுத்தனர் உறங்கி னார்கள். 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.